நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையில் அடைவது அரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தா லல்லது ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருணிய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருணியம். இது தான் முத்தியடைவதற்கும் சித்தியடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.
பிரணவத்தின் ஐந்து பாகம் யாவெனில் அகரம், உகரம், மகரம், விந்து, நாதம். பஞ்சமி என்னும் வாக்கு பிரணவத்தின்கண் இருந்து தோன்றியது. அதற்கு ஸ்தானம் மூலாதாரம். அதிலிருந்து தோன்றிய மற்ற நான்கும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி. இவற்றிற்கு இடம் நாபி, இருதயம், கண்டம் லலாடம்.
ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு, பூரண லக்ஷியத்தை விட்டு, அதிசயமாகப் பார்த்து நிற்றல். இந்த விருப்பால் தானுங் கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, சாதனமுந் தடைப்பட்டுவிடும். எவ்வகையிலும் விருப்பென்பது கூடாது.
வெறுப்பென்பது யாது?
வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதரவஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவோபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்புங் கூடாது. மேற்குறித்த இரண்டுமற்று, சத்துவமயமாய் நிற்றல் வேண்டும்.